நாகை மீன்பிடித் துறைமுகத்தில், மீன்வளத் துறை சார்பில் அமைக்கப்பட்ட அறிவிப்பு பதாகைக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மீன்பிடித் துறைமுகம் பகுதியில் புதன்கிழமை காலை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுக வளாகத்தில், மீன்வளத் துறை சார்பில் புதன்கிழமை ஒரு அறிவிப்புப் பதாகை அமைக்கப்பட்டது. அதில், இந்த இடம் மீன்வளத் துறைக்குச் சொந்தமானது. இந்த இடத்தை யாரும் அத்துமீறி பயன்படுத்த, ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. திடீரென வைக்கப்பட்ட இந்த அறிவிப்பு, துறைமுகத்திலிருந்து மீனவர்களை அந்நியப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கருத்து மீனவர்களிடையே ஏற்பட்டது. இதையடுத்து, மீன்வளத் துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட முயற்சிகள் மேற்கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், மீனவப் பஞ்சாயத்தாரின் அவசர ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட முடிவுப்படி, மீனவர்களை அந்நியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மீன்வளத் துறையின் அறிவிப்புப் பதாகையை அகற்ற வேண்டும் என மீன்வளத் துறை ஆய்வாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, காவல் துறையினர், மீன் வளத் துறை ஆய்வாளர் ஆகியோர் மீனவர்களின் கோரிக்கையை மீன்வளத் துறை உயர் அலுவலர்களிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மீன்வளத் துறையின் அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








