தூய்மை இந்தியா திட்டப் பணியில், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் முதலிடமும், தமிழகத்தில் 24 -ஆம் இடத்தையும் கீழ்வேளூர் பிடித்துள்ளது.
நகரங்களில் தூய்மை இந்தியா திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்தும் வகையில் மத்திய அரசால் ஸ்வாச் சர்வேக்கள் 2018 எனும் தூய்மை கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் மக்கள்தொகைக்குள்பட்ட நகரங்களில் கீழ்வேளூர் பேரூராட்சி தென்னிந்தியாவில் 117-ஆவது தூய்மையான நகரமாகவும், தமிழ்நாட்டில் 24-ஆவது தூய்மையான நகரமாகவும், திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்ட அளவில் முதல் நகரமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கீழ்வேளூரில் தூய்மை இந்தியா திட்ட அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் வரித்தண்டலர் கு. குகன் திட்ட செயல்பாடுகள் குறித்து தெரிவித்தது: கீழ்வேளூரில் 15 வார்டுகளிலும் வீடுவீடாக குப்பைகள் நீலம் மற்றும் பச்சை இரு வண்ணக் கூடைகளில் தரம்பிரித்து வாங்கப்பட்டு, வளம் மீட்பு பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்கும் உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முன்னோடி முயற்சியாக சோதனை அடிப்படையில் இருசக்கர வாகனம் மூலம் குப்பை வாங்கப்படுகிறது.
மேலும், தெருக்களில் குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்து பகுதிக்கும் செல்வதை உறுதிப்படுத்த ஜிபிஎஸ் கருவிகள் நிறுவப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதை உறுதி செய்ய கைவிரல் ரேகை அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்படுகிறது என்றார் அவர்.
முதலிடம் பிடித்ததையடுத்து, தூய்மை பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வாகன ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டப்பட்டனர். அப்போது, செயல் அலுவலர் பூ. கமலக்கண்ணன், இளநிலை உதவியாளர் சீ. சித்ரகலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








