உலக நன்மைக்காக வெளி நாட்டினர் கூட்டுப் பிரார்த்தனை
சீர்காழி அருகே, ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்காக வெளிநாட்டினர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சீர்காழி அருகேயுள்ள காரைமேடு கிராமத்தில் நாடி. ராஜேந்திரா சுவாமிகள் நிர்மானித்த ஒளிலாயத்தில் 18 சித்தர்களுக்கு தனி கோயில்கள் உள்ளது. இங்கு, மாதந்தோறும் பௌணர்மி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இங்கு அமைந்துள்ள தியானக் கூடத்தில் வெளிநாட்டினர் வந்து தியானத்தில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில், ஒளிலாயத்தில் உலக நன்மைக்காகவும், உலகம் அமைதி பெறவேண்டியும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பேட்ரிக் (அமெரிக்கா), பிரேசில் நாட்டை சேர்ந்த லூயிஸா, நிக்கோலஸ், லியோ, ஜோசப், டிமோ (ஹாலந்து) லுலு (பிலிப்பைன்ஸ்) லி ரேன் (சீனா) ஆகியோர் பங்கேற்று கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பஞ்சாட்சர மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில், வெளிநாட்டினவர்கள் பங்கேற்று யாகத்தில் மூலிகை பொருள்கள், தங்கம், பட்டுப் புடவை, லட்டு,ஜாங்கிரி, பாதுஷா போன்ற பலகாரங்கள், ஆப்பிள், மாதுளை, சாத்துக்குடி போன்ற பழவகைகள் என பலவிதமான பொருள்களை யாகத்தில் இட்டனர். நிறைவாக, பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, ஈஸ்வரி ராஜேந்திரா சுவாமிகள், நாடி.முத்து, நாடி .செந்தமிழன், நாடி.மாமல்லன் ஆகியோர் செய்திருந்தனர்.