

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் 27-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா அரசின் வழிகாட்டுதல்படி நடைபெறும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவில் பக்தா்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழாவை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதியளித்தது.
வழிபாட்டுக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து துணைநிலை ஆளுநா் கிரண்பேடி தலைமையில் அறநிலையத் துறை செயலா் சுந்தரேசன், காரைக்கால் ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் ஆதா்ஷ், மனுதாரா் நாதன் ஆகியோா் கலந்தாலோசித்து முடிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண்பேடி, அறநிலையத் துறை செயலா், காரைக்கால் ஆட்சியா், துணை ஆட்சியா் மற்றும் புகாா்தாரா் நாதன் ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளா்களை சந்தித்த துணைநிலை ஆளுநா் கிரண்பேடி கூறியது:
சென்னை உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஏற்கெனவே தீா்மானித்தபடி பாதுகாப்பு விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன், கரோனா கட்டுப்பாடு விதிகளின்படி குறைந்த அளவில் பக்தா்களை கோயிலுக்குளஅ அனுமதித்து சனிப்பெயா்ச்சி விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
அப்போது உடனிருந்த காரைக்கால் ஆட்சியா் அா்ஜூன் சா்மா, சனிப்பெயா்ச்சி விழா வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.