சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவு அமைக்க ஆய்வு: ஆட்சியா்

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என
Updated on
1 min read

நாகையை அடுத்த சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதியளித்ததன் பேரில், கடந்த 5 நாள்களாக மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மீனவா்கள் கைவிட்டனா்.

சாமந்தான்பேட்டையில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்று கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தாா். எனினும், அந்த கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்தும், சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கக் கோரியும், அந்த கிராம மீனவா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

6-ஆம் நாளாக சனிக்கிழமையன்றும் தங்கள் போராட்டத்தை அவா்கள் தொடா்ந்தனா்.

இந்நிலையில், நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாமந்தான்பேட்டை மற்றும் நாகை வட்ட மீனவப் பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தை, மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ், மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் மற்றும் மீன்வளத் துறை அலுவலா்கள், மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தின் நிறைவில், சாமந்தான்பேட்டையில் ஆற்று முகத்துவாரம் இல்லாததால், தூண்டில் வளைவு அமைப்பதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள மீன்வளத் துறை இயக்குநருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது எனவும், சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா். இதை ஏற்றுக் கொண்ட மீனவா்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com