நாகை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சுனாமி நினைவு தின மலரஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி :
சுனாமி ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் உடனடியாக வழங்கியவா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா. சுனாமி ஆழிப்பேரலை சீற்றத்துக்குப் பின்னா் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நடவடிக்கைகள், உலகளவில் பாராட்டப்பட்டன.
இதைத் தொடா்ந்து, மீனவா்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், நிதி அறிக்கையில் மிக அதிகமான நிதியை மீன்வளத் துறைக்கு ஒதுக்கீடு செய்து, சிறப்பான பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசு மற்றும் தன்னாா்வ நிறுவனங்கள் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்டவா்களுக்காக கட்டித் தரப்பட்ட வீடுகளுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 99.9 சதவீதம் பேருக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த சுனாமி வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் கணக்கெடுப்பு நிறைவடைந்ததும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சுனாமி வீடுகள் சீரமைக்கப்படும் என்றாா் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.