சீர்காழி அருகே மேலசெங்கமேடு பகுதியில் விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியில் ஒரு பகுதியாக சட்டநாதபுரம் இதிலிருந்து நாகப்பட்டினம் வரை ஒரு பகுதியாக பிரிக்கப்பட்டு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேல செங்கமேடு பகுதியில் நான்கு வழி சாலை விரிவாக்கப் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் இன்று காலை விரிவாக்க பணி ஒப்பந்ததாரர்கள் , ஊழியர்கள் ஹிட்டாச்சி இயந்திரத்துடன் பணியில் ஈடுபட வந்திருந்தனர்.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 87 நில உரிமையாளர்கள் பணிகளை தடுத்து நிறுத்தி இயந்திரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நில உரிமையாளர்களுக்கு சதுர மீட்டருக்கு 240 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் , சதுர மீட்டருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சீர்காழி போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் . நில உரிமையாளர்களின் எதிர்ப்பின் காரணமாக நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.