சீர்காழி: சீர்காழி நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியை உள்பட 7 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் புளிச்சக்காடு, தோட்ட மானியம், ஆலமரத்தடி, நித்திய வனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 18 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியராக ராகினி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. தொடர்ந்து பள்ளி விடுமுறைக்கு பின் இன்று பள்ளிக்கு வந்த மேலும் 5 மாணவ மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியைக்கு காய்ச்சல் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் சுகாதாரத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு குடிநீர் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பள்ளியில் பயிலும் 18 மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியை, உதவி ஆசிரியை ஆகியோரை இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை ஈடுபடுத்தி உள்ளனர்.
இதையும் படிக்க: சிவகாசி அருகே நெகிழிப்பை துண்டு விழுங்கிய குழந்தை உயிரிழப்பு
மாணவ-மாணவிகளின் உடல்நலம் பாதிப்பிற்கு அவர் வீட்டில் சாப்பிட்ட உணவு காரணமா அல்லது குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெற்றோர்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.