நாகூரில் ரமலான் சிறப்பு தொழுகை : திரளானோர் பங்கேற்பு
நாகப்பட்டினம்: நாகூர் தர்கா மற்றும் கடற்கரை பகுதிகளில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இஸ்லாம் மார்க்கம் குறிப்பிடும் 5 முக்கியக் கடமைகளில் ஒன்றாக உள்ளது ரமலான் நோன்பு. இதன்படி கடந்த ஒரு மாத காலமாக நோன்பிருந்த இஸ்லாமியர்கள் செவ்வாய்க்கிழமை ரமலான் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையொட்டி, நாகூர் ஆண்டவர் தர்காவில் உள்ள நவாப் பள்ளி, நாகூர் கடற்கரை ஆகிய பகுதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல, நாகை, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் ரமலான் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ரமலான் பண்டிகையின் சிறப்பு தொழுகைகளுக்குக் கட்டுப்பாடு இருந்த நிலையில், நிகழாண்டில் எவ்வித கட்டுப்பாடுமின்றி சிறப்பு தொழுகைகளில் ஈடுபட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.