சீர்காழி: சீர்காழி புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு நகருக்குள் வராமல் செல்லும் பேருந்துகள் குறித்து மயிலாடுதுறை எஸ்.பியிடம் வர்த்தகர்கள் புகார் அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்ட ஒழுங்கு பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா பங்கேற்று சீர்காழி உட்கோட்ட காவல் நிலையம் சரகத்திற்கு உள்பட்ட பகுதி பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பணம் கொடுக்கல், வாங்கல், இடப் பிரச்சனை, நில பிரச்னை தொடர்பான பல்வேறு புகார்கள் பெறப்பட்டு சட்டப்படி தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு எஸ்.பி. நிஷா அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் திரளான வர்த்தகர்கள் மற்றும் அதன் தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் வருகை புரிந்து எஸ்.பி. பிடம் புகார் மனு அளித்தனர். சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக தனியார் மற்றும் அரசு பேருந்துகள் செல்வதோடு, பயணிகளையும் நடுவழியில் இறக்கிவிட்டு செல்வதை தடுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
பள்ளி நேரங்களில் சீர்காழி தென்பாதி மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் கூடுதலாக காவலர்களை நியமித்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமெனவும், கடை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இரு சக்கர வாகனம் நிறுத்த பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என புகார் மனுவை அளித்தனர்.
இதையும் படிக்க: இளையான்குடி பேரூராட்சி பெண் தலைவருக்கு கொலை மிரட்டல்!
இதில் ஏடிஎஸ்பி தங்கவேல், காவல் துணை கண்காணிப்பாளர்கள் பழனிசாமி , வசந்தராஜ், காவல் ஆய்வாளர்கள் மணிமாறன், ஜெயந்தி, மற்றும் காவல் துறையினர் கலந்துக் கொண்டனர்.