மறு உத்தரவு வரும்வரை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெயை செலுத்த மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய்களை அகற்ற வலியுறுத்தி நாகூர் பட்டினச்சேரி கிராம மீனவர்கள் 4 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க - தொடர்ந்து 3வது நாளாக 42 ஆயிரத்தில் நீடிக்கும் தங்கம் விலை!
இந்நிலையில் குழாய் சேதமடைந்த இடத்தில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் நேரில் பார்வையிட்டு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறு உத்தரவு வரும்வரை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெயை செலுத்த மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் மீனவர்களிடம் உறுதியளித்தார்.
இதனிடையே நேற்று (மார்ச் 5) இரவு நாகை தாலுக்கா மீனவர்கள் பிரதிநிதி அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மார்ச் 8 ஆம் தேதி பனங்குடி பகுதியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.