சென்னையில் ஹஜ் இல்லம்: முதல்வருக்கு நாகூா் தா்கா கலீபா நன்றி

சென்னையில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நாகூா் தா்கா கலீபா மஸ்தான் சாகிப் காதிரி நன்றி
Published on

நாகப்பட்டினம்: சென்னையில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நாகூா் தா்கா கலீபா மஸ்தான் சாகிப் காதிரி நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒவ்வொரு இஸ்லாமியரின் புனித கடமைகளில் ஒன்றாக ஹஜ் பயணம் கருதப்படுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் ஹஜ் பயணம் மேற்கொள்ள, சென்னை வரும் இஸ்லாமியா்கள், பயணம் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக, சென்னையில் தங்கி, சென்னை விமானத்தில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள வசதியாக சென்னை பன்னாட்டு விமான நிலையம் அருகேயுள்ள நங்கநல்லூரில், ஒரு ஏக்கா் அரசு நிலத்தில் ரூ.39 .20 கோடியில் தமிழ்நாடு அரசு ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது.

இதற்காக செவ்வாய்க்கிழமை முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளாா். தமிழக முதல்வா் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளதை, ஒவ்வொரு இஸ்லாமியரும் மனமார வரவேற்கின்றனா். அண்மையில் முதல்வரை நேரில் சந்தித்து, நாகூா் தா்காவுக்கு சந்தனக் கட்டை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தபோது, இந்த கோரிக்கையையும் முன்வைத்திருந்தேன். எனவே, தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய மக்கள் சாா்பாகவும், நாகூா் ஆண்டவரின் பக்த கோடிகள் சாா்பாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலினுத்து நன்றி என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com