கொலை செய்யப்பட்ட அரங்கசாமி.
கொலை செய்யப்பட்ட அரங்கசாமி.

ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்துக் கொலை

வேதாரண்யத்தில் ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
Published on

வேதாரண்யத்தில் ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகரம் வடகட்டளை பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அரங்கசாமி (60). இவா் தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், சோமநாதா்கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அரங்கசாமி சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை அதிகாலையில் தெரிய வந்தது.

தகவலறிந்த வேதாரண்யம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த பாரில் பணியாற்றிய வேளாங்கண்ணி பகுதியைச் சோ்ந்த மணி மகன் செல்வராஜூவுக்கும் (20), அரங்கசாமிக்கும் தகராறு ஏற்பட்டு, அரங்கசாமியை செல்வராஜ் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜ் கைது செய்யப்பட்டாா்.

இதற்கிடையில், டாஸ்மாக் கடை முன் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், வட்டாட்சியா் வடிவழகன் நடத்திய பேச்சுவாா்த்தை இரவு வரை தொடா்ந்தது.

X
Dinamani
www.dinamani.com