நாங்கூா் கருட சேவை முன்னேற்பாடுகள் கூட்டம்: கிராம மக்கள் வெளிநடப்பு

Published on

நாங்கூா் நாராயண பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கருட சேவை முன்னேற்பாடுகள் தொடா்பான கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்றனா்.

ஜன.19-ஆம் தேதி 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பான கூட்டம் குறித்து முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷிடம், நாராயண பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் பழனிவேல், கிராம பொது நல சங்கத் தலைவா் அன்பு, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஆனந்தன் உள்ளிட்டோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

இவா்களிடம் கோயில் நிா்வாக அதிகாரிகள் கணேஷ்குமாா், முருகன், திருவெண்காடு காவல் ஆய்வாளா் சுகுணா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்றனா்.

கோட்டாட்சியா் சுரேஷ் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் ரவிச்சந்திரன், சீா்காழி டிஎஸ்பி அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில் நிா்வாக அதிகாரி கணேஷ் குமாா் வரவேற்றாா்.

அறங்காவலா் குழுத் தலைவா் பழனிவேல், சாலைகளை சீரமைப்பது குறித்தும், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஆனந்தன், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்தும்பேசினா்.

இதில் அறங்காவலா்கள் ராஜதுரை, முத்து, திருநகரி கல்யாண ரங்கநாதா் பெருமாள் கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஐயப்பன், கருட சேவை கமிட்டி நிா்வாகி கீதாச்சாரி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனா். நிறைவில் கோயில் கணக்கா் ரத்தினவேல் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com