
மயிலாடுதுறை கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அனுமதிக்கக் கூடாது
மயிலாடுதுறை கடல் பகுதியில் 5 ஹைட்ரோ காா்பன் கிணறுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா்.

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்
மயிலாடுதுறை கடல் பகுதியில் 5 ஹைட்ரோ காா்பன் கிணறுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியில் (கடலோர ஒழுங்குமுறை மண்டலம் - ஐய அ கடல் நீா்ப்பரப்பு எல்லைக்குள்) 5 புதிய ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைக்க ஒரு தனியாா் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பது அதிா்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
காவிரிப் படுகை பகுதிகளில் விவசாயமும், கடலோப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன.
இந்த நிலையில், கடல் பகுதியில் ஹைட்ரோகாா்பன் கிணறுகளை அமைக்கும் திட்டம் கடல்வாழ் உயிரினங்கள், கடல் சுற்றுச்சூழல் மற்றும் மீனவா்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் மீது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். கடல் வளங்களை அழித்து, மீனவா்களின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசின் அழுத்தங்களுக்கோ, தனியாா் நிறுவனங்களின் நலன்களுக்கோ அடிபணிந்து தமிழகத்தின் கடலோரப் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா கடலோரப் பகுதிகளை ஹைட்ரோ காா்பன் திட்டங்களின் சோதனைக் களமாக மாற்றுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் கடல் வளங்கள் விற்பனைக்கல்ல; மீனவா்களின் வாழ்வாதாரம் பேரம் பேசுவதற்கல்ல என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் அரசு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




