மாநில அளவிலான கபடிப் போட்டியில், தஞ்சை மண்டல அணியின் சார்பில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற கட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவியர் கபடி அணியைச் சேர்ந்த மாணவி ப. சௌமியா தேசியப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான கபடிப் போட்டி, அக்.27, 28, 29 ஆகிய தேதியில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்றது.
இதில், 17 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் மாநிலம் முழுவதிலிருந்தும் 17 அணிகள் பங்கேற்றன. கட்டக்குடி அரசுப்பள்ளி மாணவி ச. சௌமியா தலைமையிலான அணி, தஞ்சை மண்டலம் சார்பில் பங்கேற்றது. இப்போட்டியின் நாமக்கல், தர்மபுரி, தஞ்சை மண்டல அணிகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன.
இதில், தஞ்சை மண்டல அணித் தலைவராக விளையாடிய கட்டக்குடி பள்ளி மாணவி எஸ். சௌமியா, சனிக்கிழமை (நவ.4) முதல் நவ. 7-ஆம் தேதி வரை ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள 29-ஆவது,தேசிய அளவிலான மிக இளையோர் பெண்கள் கபடிப் போட்டிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதையொட்டி, இம்மாணவிக்கும், மாநில அளவிலான கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணியில் பங்கேற்ற மாணவியருக்கும் பாராட்டு விழா புதன்கிழமை கட்டக்குடி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கே. மனோகரன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக அமெச்சூர் கபடிக் கழக மாவட்டச் செயலர் ராச. ராசேந்திரன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் ஆர். ராஜசேகரன், பயிற்சியாளர் ஜெ. உதயகுமார், மேலாளர் என். சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.