திருவாரூரில் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், திருவாரூர், மன்னார்குடியில் 9 மற்றும் 10-ஆம் வகுப்புக்கு தமிழ்ப் பாடம் கற்பிக்கும் 190 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2-ஆம் கட்ட பணியிடைப் பயிற்சி தொடங்கியது.
வலங்கைமான், குடவாசல், கொரடாச்சேரி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு திருவாரூர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அலுவலகத்திலும், மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய 5 ஒன்றியங்களிலுள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருவாரூர் மையத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதனும், மன்னார்குடி மையத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆர். மாரியப்பனும் தொடங்கி வைத்தனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாக பழையவலம், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மீனாகுமாரி, பாளையக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.
கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் காளிதாஸ், அறிவரசு, தமிழ்க்காவலன், மணிகண்டன், சந்தானலட்சுமி, ரேகா, மாமலைவாசன் ஆகியோர் பங்கேற்று, பயிற்சியளித்தனர்.
திருவாரூர் மையத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் இரா. மணிவண்ணன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ. பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். பயிற்சி அக். 13-ஆம் தேதி நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.