அரசின் அனைத்து துறைகளின் திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ள சட்ட சேவை முகாம் நடத்தப்படுகிறது என, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் அருகேயுள்ள விளமலில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக்கான ஒருங்கிணைக்கபட்ட சட்ட சேவை முகாமை புதன்கிழமை மாலை நடத்தின. மாவட்ட நீதிபதி ஆர். கலைமதி தலைமை வகித்தார்.
முகாமில் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பேசியது:
அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, இந்த முகாம் நடத்தப்படுகிறது. மேலும், ஒவ்வொரு திட்டத்துக்கும் தகுதியின் அடிப்படையில் பயனடைய வேண்டும் என்பதை தெரியப்படுத்தவே இம்முகாம் நடத்தப்படுகிறது.
பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்டவைகள் பெற, இடைத்தரகர்கள் இல்லாத வகையில், இ-சேவை மையங்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இதனால் காலவிரயம் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து கொண்டு மக்கள் பயன் பெற வேண்டும் என்றார்.
விழாவில் மாவட்ட நீதிபதி ஆர். கலைமதி பேசியது:
அரசுத் துறைகள் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் சட்டம் சார்ந்த மற்றும் இதர நலத் திட்டங்கள் குறித்தும், மக்களுடைய சட்டப்படியான தேவைகளைத் தெரிந்து கொள்ளவும், சட்டப் பிரச்சனைகளுக்குத் தேவையான ஆலோசனை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் இம்முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதில் தாமதம் மற்றும் சட்டம் குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது கோரிக்கைகளை விண்ணப்பங்களாக வழங்கலாம். அதற்கு உரிய நடவடிக்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், 5 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித் தொகைக்கான ஆணை, மேலும் 5 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித் தொகைக்கான ஆணை, 4 பேருக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகைக்கான ஆணை, 6 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, 11 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கூட்டுறவுத் துறை சார்பில் 9 பேருக்கு ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கடனுதவிக்கான ஆணை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 10 பேருக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் அசோலா தீவனப்பயிர் வளர்ப்பு ஈடுபொருள் என மொத்தம் 50 பேருக்கு ரூ. 20 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கூடுதல் மாவட்ட அமர்வு மகிளா நீதிபதி பக்கிரிசாமி, சார்பு நீதிபதி எஸ். கோவிந்தராஜன், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி. மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்ஜோசப், மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.