நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்: முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடவும்,  ராசிமணலில் அணைக் கட்ட அனுமதி வழங்கும்படியும், பிரதமரிடம்

Updated On :8 அக்டோபர் 2018, 7:51 am IST

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிடவும்,  ராசிமணலில் அணைக் கட்ட அனுமதி வழங்கும்படியும், பிரதமரிடம்  தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு, பாறை எரிவாயு எடுக்க இரண்டு நிறுவனங்களுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டமானது ஏற்கெனவே மன்னார்குடியை தலைமையிடமாகக் கொண்டு, மீத்தேன் எடுக்க அனுமதிக்கப்பட்ட திட்டமாகும். ஆனால், இந்த திட்டத்துக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், விவசாயிகளின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்துக்கு தடை விதித்தார். 
இந்நிலையில், அதே திட்டத்தை கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் என்ற மாற்றுப் பெயரில் மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட நகரப் பகுதியில் நகராட்சி துணையோடும், கிராமப் பகுதிகளில் பள்ளிக்கூட மைதானங்களிலும், குடிநீருக்காக எனக் கூறி, 1000 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, அரசு அதிகாரிகளின் துணையோடு  இந்த திட்டத்துக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மேலும், விவசாயிகளிடம் நிலப்பகுதியில் 1000 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்து, ஆய்வுப் பணி முடிந்தப் பிறகு இலவசமாக கிணற்றை ஒப்படைத்து விடுவோம் எனக் கூறி, நிலங்களை அபகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் இதை அனுமதிக்கக் கூடாது. இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு முன் வரவேண்டும். 
இந்நிலையில், திங்கள்கிழமை (அக்.8) பிரதமர் நரந்திர மோடியை நேரில் சந்திக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் பேரழிவு குறித்து பிரதமரிடம் விளக்கிக் கூறி, இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.
மேலும், வெள்ளப் பெருக்கின்போது, காவிரியில் உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுத்து, தண்ணீரை சேமிக்கும் வகையில் தமிழகத்தின் ராசிமணல் பகுதியில் அணைக் கட்ட அனுமதிக்கும் படி பிரதமரை முதல்வர் கேட்டுக்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.