ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூர் அருகே கோமல் பகுதியில் ஜன.25-ஆம் தேதி தீப்பந்தப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்ட அனுமதியை கண்டித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஜன.25-ஆம் தேதி திருக்காரவாசல் ஊராட்சி, கோமல் பகுதியில் தீப்பந்தப் போராட்டம் நடத்துவது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள விடுபட்ட வீடுகள், மகசூல் இழப்பிற்குள்ளான நெற்பயிர்கள், விடுபட்ட தென்னை மரங்கள், நீண்டகால பயிர்கள் ஆகியவற்றிற்கு உரிய முழுநிவாரணம் வழங்க வேண்டும், 2017 - 2018 ஆம் ஆண்டு வேளாண் காப்பீடு திட்டத்தின் மூலம் வந்துள்ள இழப்பீடு தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி ஜன.31-இல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் வருவாய் கிராம நிர்வாக அலுவலகங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க மாவட்டத் தலைவர் த. ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். செல்வராசு, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் வை. சிவபுண்ணியம், சங்க மாவட்டச் செயலர் பி.எஸ். மாசிலாமணி, பொருளாளர் கே. ராவணன், துணைத் தலைவர்கள் கே. உலகநாதன், ஏ. விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








