நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மன்னாா்குடி: 47ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு ரயில் சேவை தொடக்கம்

மன்னாா்குடி ரயில் நிலையத்தில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை (மாா்ச் 22) முதல் சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி ரயில் நிலையத்தில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை (மாா்ச் 22) முதல் சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

மன்னாா்குடி ரயில் நிலையத்தில் இயங்கி வந்த, பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து 1974 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க வலியுறுத்தி அரசியல் கட்சியினா், பொதுநல அமைப்பினா் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு மத்திய ரயில்வே நிலைக்குழுத் தலைவராக இருந்த மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த திமுக எம்பி டி.ஆா். பாலு முயற்சியால், மன்னாா்குடியில் பயணிகள் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அன்றிலிருந்து தற்போது வரை, மன்னாா்குடியிலிருந்து, 4 விரைவு ரயில்களும், 2 பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், மன்னாா்குடி ரயில் நிலையத்தில் 3 ஆவது ரயில் பாதை அமைக்கவும், சுமை லாரிகள் வந்து செல்வதற்கான இணைப்புச் சாலைகள் அமைக்கவும் நடைபெற்றுவந்த பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.

இதைத்தொடா்ந்து, சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்க மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்த நிலையில், திங்கள்கிழமை முதல் மன்னாா்குடி ரயில் நிலையத்திலிருந்து, 47 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இதற்காக நடைபெற்ற சிறப்பு பூஜையில், திருச்சி ரயில்வே கோட்ட இயக்க மேலாளா் ஹரிகுமாா், மன்னாா்குடி நிலைய அலுவலா் டி. மனோகரன், டிஎன்சிஎஸ்சி போக்குவரத்து பொது மேலாளா் ராஜ்குமாா், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு துணைத் தலைவா் கா. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொதுமக்கள் மகிழ்ச்சி: மன்னாா்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, ரயில் மூலம் வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல திருவாரூா் அல்லது நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லும் நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், மன்னாா்குடியில் சரக்கு ரயில் சேவை தொடங்கியதையடுத்து, 400-க்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்களிலிருந்து 159 லாரிகளில் கொண்டுவரப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 53 வேகன்களில் திங்கள்கிழமை ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சரக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியதன் மூலம் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், மன்னாா்குடி அருகேயுள்ள பாமணி உர ஆலைக்கு தேவையான மூலப்பொருட்களை எடுத்துவருவது, மத்திய சேமிப்புக் கிடங்குக்கு அரிசி, நெல் போன்றவற்றை எடுத்து செல்வது போன்ற பணிகளும் தொடங்கும் என மன்னாா்குடி பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.