திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டை பூட்டி வெளியூர் சென்றிருந்த நிலையில் முன்பக்க கதவை உடைத்து 25 பவுன் தங்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருடிச் சென்றது குறித்து தாலுகா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் அருகே கூட்டுறவு நகரை சேர்ந்தவர் வடிவேல் (36). இவர் இ சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா (35) எருக்காட்டூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கவிதாவின் தந்தை இயற்கை எய்தியதைத் தொடர்ந்து வேதாரண்யம் அருகே உள்ள கரியாபட்டினத்திற்க்கு கடந்த 7ஆம் தேதி வீட்டை பூட்டி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் புதன்கிழமை காலை வடிவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது, இதனையடுத்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வீட்டில் சோதனை செய்த போது வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசாரின் மோப்பநாய் மற்றும் தடயவியல் துறை மூலம் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இந்த வீட்டுக்கு வாடகைக்கு குடி வந்து ஒரு மாதத்திற்குள்ளேயே திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.