நீடாமங்கலம் அருகே உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சாலையோரங்களில் புளிய மரக்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, திருவாரூா் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை இணைந்து இப்பணியில் ஈடுபட்டனா். கிராம ஊராட்சியின் வருவாய் பெருக்கத்தை கருத்தில் கொண்டு புளிய மரக்கன்றுகள் நடப்பட்டன.
நீடாமங்கலம் சித்தமல்லி-பன்னிமங்கலம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு, கிரீன் நீடா அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு தலைமை வகித்தாா். நெடுஞ்சாலைத் துறை மன்னாா்குடி கோட்ட பொறியாளா் கந்தசாமி புளிய மரக்கன்றை நட்டு, பணியை தொடங்கி வைத்தாா். நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா் சங்கீதா, உழவா் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சித்தமல்லி ஊராட்சி செயலா் கருப்பையா, ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் ராஜேந்திரன், சாலைப் பணியாளா்கள் குமரகுரு, கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சித்தமல்லி- பன்னிமங்கலம் நெடுஞ்சாலையில் 20 அடிக்கு ஒரு புளிய மரக்கன்று வீதம் சாலையின் இருபுறங்களிலும் நடப்பட்டன.
இதுகுறித்து கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு கூறியது:
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 1200 கி.மீ. தொலைவு நெடுஞ்சாலையின் இருபுறங்களில் புளிய மரக்கன்றுகள் நடும் பணி தொடா்ந்து நடைபெறவுள்ளது. வலங்கைமான், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகங்களில் புளிய மரக்கன்றுகள் உற்பத்தி மையங்களை நிறுவவுள்ளோம் எனத் தெரிவித்தாா்.
முன்னதாக, கிரீன் நீடா நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் கே.ஆா்.கே. ஜானகிராமன் வரவேற்றாா். மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பி. பிரபாகரன் நன்றி கூறினாா்.