கூத்தாநல்லூர்: வெண்ணாற்றில் தேங்கியுள்ள வெங்காயத் தாமரையால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் பல மாதங்களாக அள்ளப்படாமல் தேங்கியுள்ள வெங்காயத் தாமரையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர்: வெண்ணாற்றில் தேங்கியுள்ள வெங்காயத் தாமரையால் தொற்று நோய் பரவும் அபாயம்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றில் பல மாதங்களாக அள்ளப்படாமல் தேங்கியுள்ள வெங்காயத் தாமரையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் மூணாறு தலைப்பில், பாமிணி, கோரையாறு, வெண்ணாறு என 3 கிளை ஆறுகளாகப் பிரிகிறது. 

நீடாமங்கலம் ஒளிமதி வழியாக வந்து, வெண்ணவாசல் என்ற இடத்தில், வெண்ணாறு, பாண்டவையாறு எனப் பிரிகிறது. அதைத் தொடர்ந்து, அத்திக்கடை, வாழச்சேரி எனும் இடத்தில் வெண்ணாறு, வெள்ளியாறு என இரண்டாகப் பிரிகிறது. இதில், வெண்ணாறு லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், பாண்டுக்குடி, வடபாதிமங்கலம், புள்ளமங்கலம் வழியாகச் சென்று அரிச்சந்திரா நதியில் கலக்கிறது. 

வெண்ணாற்றிலிருந்து முதன்மை வாய்க்கால்கள் பெரியதும், சிறியதுமாகப் பிரிந்து செல்கிறது. மேலும், பல கிளை வாய்க்கால்களுமாகப் பிரிந்து, பாசனத்துக்குச் செல்கின்றது. 

இந்நிலையில், வெண்ணாற்றில் வெங்காயத் தாமரைகள் மண்டி, பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத வகையில் மண்டிக் கிடக்கிறது. மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், நாம் மனிதர் கட்சியின் மாநில நிர்வாகியுமான, முஹம்மது சுலைமான் கூறியது: 

வெண்ணாற்றில் தூர் வாரப்பட்டு, ஆற்று ஓரங்களில் வளர்ந்திருந்த தேவையற்ற மரங்கள் அகற்றப்பட்டன. இருபுறங்களிலும் கரைகள் உயர்த்தப்பட்டன. பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் கிளை வாய்க்கால்களில் மட்டும் சுத்தப்படுத்தப்பட்டு, மண்டிக் கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில், ஆற்றில் மிதந்து வந்த வெங்காயத் தாமரைச் செடிகள், தேவையற்ற கழிவுகள், கூத்தாநல்லூர் பாய்க்காரப் பாலத்தின் கீழே தேங்கியுள்ளது. 

இதனால், ஆற்றுத் தண்ணீர் மேற்கொண்டு செல்ல முடியாமல் தேங்கி தடை ஏற்பட்டுள்ளது. மேலும், மிகப் பழமையான பாலமான பாய்க்காரப் பாலமும் சேதம் அடையக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், தினமும் ஆயிரக்கணக்கானோர் இம்பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகின்றனர். 
தேங்கியுள்ள வெங்காயத் தாமரைச் செடிகள், கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு அசுத்தங்கள் தேங்கி நிற்கிறது. இதனால், இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வெண்ணாற்றில் தேங்கியுள்ள வெங்காயத் தாமரைச் செடிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அள்ளப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நேரில் பார்வையிட்டு, வெங்காயத் தாமரைச் செடிகளை அகற்றிட வேண்டும் என்றார். 


இதுகுறித்து, நகராட்சி ஆணையர் ப.கிருஷ்ணவேணி கூறியது: "பொதுப் பணித் துறைக்குட்பட்ட வெண்ணாற்றில் அவர்கள்தான் அள்ளி, கரையின் மேலே கொட்ட வேண்டும். அதை நகராட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்ய வேண்டும். உடனே, பொதுப்பணித் துறை அதிகாரியிடம் தெரியப்படுத்துகிறோம்" என்றார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com