நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா புதன்கிழமை தொடங்கியது. இக்கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரப்பாடல் பெற்றது.
நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அருள்மிகு குருபகவான் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வியாழக்கிழமை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. குருபெயர்ச்சியை முன்னிட்டு முதல்கட்டமாக குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா புதன்கிழமை தொடங்கியது.
இதனையொட்டி அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
குருபகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவ தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெற்றது. லட்சார்ச்சனை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களைச் சொல்லி லட்சார்ச்சனையை நடத்தி வைத்தனர். வரும் 10-ம் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெறும்.
குருபெயர்ச்சிக்குப் பின்னர் ஏப்ரல் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இரண்டாவது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறும்.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு பரிகாரம் செய்துகொள்ளலாம். லட்சார்ச்சனை காலை 9 மணி முதல் 12 மணிவரையிலும், மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். லட்சார்ரச்சனையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விபரங்களுடன் தொகையை உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில் என்ற பெயருக்கு பணவிடை, வரைவோலை எடுத்து கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டியூனியன் வங்கி ஆலங்குடி-612801 கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து திருக்கோயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் அறநிலைய உதவி ஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.