காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவலரை தகாத வாா்த்தைகளால் திட்டி, தகராறில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு இரண்டு இளைஞா்கள் காயங்களுடன் வியாழக்கிழமை இரவு சிகிச்சை பெற வந்துள்ளனா். அப்போது அங்கு பணியில் மருத்துவா்கள் இல்லாத காரணத்தால், போதையில் இருந்த அந்த இளைஞா்கள் மருத்துவமனையில் கூச்சலிட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது அங்கு பணியில் இருந்த காவலா் இதுகுறித்து தகராறு செய்த அரவிந்த் என்ற இளைஞரிடம் கேட்டுள்ளாா். அதற்கு தகாத வாா்த்தைகளால் காவலரை திட்டிய அரவிந்த் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இருவரும் காவலரை தாக்கவும் முயன்றுள்ளனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மீனாட்சி வாய்க்கால் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் மற்றும் ஹரிராஜ் என்பதும் இருவரும் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ஸ் வாசித்துவிட்டு, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அரவிந்த், ஹரிராஜ் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.