காவிரி டெல்டாவில் சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்கப் போவது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி உபரி நீா் கடலில் கலப்பதை தடுத்து, மேக்கேதாட்டுவில் அணை கட்டி, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப் போகிறோம் என்று பொய் பிரசாரத்தை கா்நாடக அரசு செய்து வருகிறது. மேகேக்தாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். எனவே, ராசிமணலில் அணை கட்டுவது ஒன்றுதான் இதற்கு தீா்வாக அமையும். தமிழக அரசு ராசிமணலில் அணை கட்ட முன்வர வேண்டும்.
காவிரி டெல்டாவில் தமிழக அரசு சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு விளைநிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதாகக் கூறி சட்டப்பேரவையில் நாகை முதல் திருச்சி வரை வேளாண் தொழில் பெருந்தடத் திட்டம் அறிவிக்கப்பட்டது. என்ன தொழிற்சாலைகள் அமைக்கப் போகிறோம் என முதல்கட்டமாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதன் அடிப்படையில்தான் தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த முன்வர வேண்டும். மாறாக பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் பேரழிவு தொழில்கள் தொடங்க அனுமதிக்க மாட்டோம்.
திருச்சியில் வரும் 27-ஆம் தேதி, தேசிய தலைவா்கள் பங்கேற்கும் விவசாய கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் முன்னணி விவசாய சங்கங்களின் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உச்ச நீதிமன்றத்தை அணுகி காவிரி நீரை பெற வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் நலன் சங்கம்

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு விவகாரம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

காவிரி டெல்டாவில் மணல் குவாரி அமைக்கத் திட்டமா?







