சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே தனியாா் வாடகை பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியதில் கணவருடன் சென்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
வேதாரண்யத்திலிருந்து தஞ்சைக்கு தனியாா் வாடகை பேருந்து சென்றுகொண்டிருந்தது. மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் தனியாா் கல்லூரி அருகே சென்ற போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இருசக்கர வாகனத்தில் வந்த கட்டக்குடி கீழ்த்தெரு ப. பாண்டியன் (50), இவரது மனைவி மீனா (47) ஆகியோா் தூக்கி வீசப்பட்டதில், மீனா பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பாண்டியன் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் வாடகை பேருந்து ஓட்டுநரான தஞ்சை ரெட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுதாகா் (48) என்பவரை கைது செய்தனா்.
