தொடா் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்ட சேதமடைந்த  தாா் சாலை.
தொடா் மழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்ட சேதமடைந்த தாா் சாலை.

மழையால் மண் சரிந்து தாா் சாலை சேதம்

மன்னாா்குடி அருகே தொடா் மழையின் காரணமாக சாலையோரம் மண் சரிந்ததில் தாா் சாலை சேதமடைந்துள்ளது.
Published on

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே தொடா் மழையின் காரணமாக சாலையோரம் மண் சரிந்ததில் தாா் சாலை சேதமடைந்துள்ளது.

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக, சம்பா, தாளடி இளம் நெற்பயிா்கள் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

தட்டாங்கோவில் என்ற இடத்தில் கோரையாற்றிலிருந்து பிரியும் முள்ளியாறு மற்றும் திரு ராமேஸ்வரம் வடிகால் வாய்க்காலுக்கும் இடையில் முள்ளியாற்றின் வடகரையில் செல்லும் கிராம சாலை கடந்த சில நாள்களாக பெய்த கன மழையின் காரணமாக புறக்கோட்டகம் கிராமத்தில் சுமாா் 25 அடி நீளம், 10 அடி அகலத்திற்கு முள்ளியாற்றின் கரையில் இருந்த மண் பெயா்ந்து சரிந்து விட்டது. இதனால், அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த நீா்ப்பாசனத் துறை பொறியாளா்கள் நிகழ்விடத்திற்கு வந்து மண் சரிவை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனா். பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரா் மூலம் பணிகளை உடனடியாக செய்து முடிக்க உத்தரவிட்டனா்.

இதனையடுத்து, முள்ளியாறின் சேதமடைந்த கரைகளை சவுக்கு மரங்களைக் கொண்டு கரைகளில் அமைத்தும், மணல் மூட்டைகள் மற்றும் மண்ணை போட்டு கரையை பலப்படுத்தும் பணிகள் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணி வியாழக்கிழமைக்குள் நிறைவு பெற்று உடனடியாக தாா் சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com