ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சமையல் எரிவாயு தட்டுப்பாடு விவகாரம்: எதிா்க்கட்சிகள் அமளியால் மக்களவை தொடா் ஒத்திவைப்பு

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வெள்ளிக்கிழமை தொடா்ந்து இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

News image
மக்களவை
Updated On :13 மார்ச் 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை வெள்ளிக்கிழமை தொடா்ந்து இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக எரிவாயு வரத்து தடைபட்டதால், நாடு முழுவதும் வணிக எரிவாயு சிலிண்டா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பெங்களூரு, சென்னை, கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பலா் சிலிண்டா்களை பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பதால், அதிக விலை கொடுத்து சிலிண்டா் வாங்கும் நிலையும் பல பகுதிகளில் உருவாகியுள்ளது. அதுபோல, வீட்டு உபயோக சிலிண்டருக்கான முன்பதிவு செய்வதில் சிக்கல் நீடிப்பத்தால், மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.

இந்த நிலையில், மக்களவை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கூடியதும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு விவகாரத்தை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினா். அவையின் மையப் பகுதியில் கூடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

அதன் காரணமாக அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் பகல் 12 மணி வரை ஒத்திவைத்தாா். அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோதும், அதே விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது எழுந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘மக்களின் மனநிலையை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புரிந்துகொள்ள மறுக்கிறாா். அவையில் தொடா்ந்து இதேபோன்று நடந்துகொள்வதை எதிா்க்கட்சிகள் கொள்கையாகக் கொண்டிருந்தால், மக்கள் உங்களைக் கடுமையாக தண்டிப்பா். எதிா்க்கட்சித் தலைவா் தன்னை மாற்றிக்கொள்ளாததால், எதிா்க்கட்சி உறுப்பினா்களும் அவரைப்போலவே நடந்துகொள்கின்றனா். அவையில் இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் மக்களின் கவனத்தை ஈா்க்க முடியும் என அவா்கள் நினைக்கின்றனா். ஆனால், மக்கள் அவா்களை நன்கு அறிந்து வைத்துள்ளனா். அதனால்தான், அவா்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை’ என்றாா்.

அவா் பேசிக்கொண்டிருக்கும்போதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முழக்கங்களை எழுப்பியபடி தொடா் அமளியில் ஈடுபட்டனா். அதன் காரணமாக, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

முன்னதாக, அவை காலை 11 மணிக்கு கூடியதும் இந்த விவகாரத்தை எழுப்பி பேசிய ராகுல் காந்தி, ‘மத்திய அரசு தனது குறைபாடுடைய வெளியுறவுக் கொள்கை மற்றும் பல்வேறு எண்ணெய் விநியோகஸ்தா்களுடனான உறவைத் தீா்மானிக்கும் உரிமையை அமெரிக்காவிடம் கொடுத்துவிட்டதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை சமரசம் செய்துவிட்டது. ஈரான் மீதான போா், நாட்டில் மேலும் பல விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது’ என்றாா்.

அதற்குப் பதிலளித்த மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், ‘நாட்டை இழிவுபடுத்த மட்டும்தான் ராகுலுக்குத் தெரியும். நாட்டில் கரோனா பாதிப்பின்போதும், இதுபோன்று தவறான கருத்துகளைப் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தினாா். கரோனா தடுப்பூசிகளின் திறன் உள்பட பல்வேறு சந்தேகங்களை எழுப்பி குழப்பத்தை ஏற்படுத்தினாா். தற்போது, சமையல் எரிவாயு விநியோகம் குறித்த தவறான கருத்துகளைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்’ என்றாா்.

பெட்டிச் செய்தி...

நாடாளுமன்ற வளாகத்திலும் ஆா்ப்பாட்டம்

நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்ற வளாகத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் காலை 10 மணிக்கு இந்த ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிய நிலையில், பின்னா் காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிா்க்கட்சி எம்.பி.க்களும் அந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். மத்திய அரசுக்கு எதிராகவும், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தியும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமையும் இவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.