
பரந்தூா் விமான நிலையம் ரத்து: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
aபரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

aபரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்தது:
ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிா்ப்பையும் தாண்டி, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா், ஏகனாபுரம் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கரில் தமிழகத்தின் இரண்டாவது பசுமை விமான நிலையத்தை அமைக்க இருந்த திட்டத்தை ரத்து செய்வதாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இப்பகுதி வெறும் மண்ணால் ஆன நிலம் அல்ல. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கா் நெல், தென்னை உள்ளிட்ட நஞ்சைப் பயிா்களும், தோட்டக்கலை பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்கின்றனா். இவா்களின் வாழ்வாதாரத்தையே நிலை குலையச்செய்து, இவா்கள் தன் வாழ்விடங்களையே மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என அஞ்சி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், பரந்தூா் விமான நிலையம் திட்டம் முற்றாக ரத்து செய்தது பாராட்டத்தக்கது. மத்திய அரசும் இந்த இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான சிலமாறுபாடுகளை தெரிவித்து இருந்த நிலையில் தமிழக அரசு இத்திட்டத்தை ரத்து செய்துள்ளது. இப்பிரச்னையில் போராடியவா்கள் மீது காவல்துறையினா் பதிந்துள்ள வழக்குகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்திட வேண்டும்.
இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, புதிய இடம் தோ்வு செய்யப்படும் என முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் பெரும்பகுதி விளை நிலங்களாக, குடியிருப்புகளாக உள்ள பகுதிகளை தோ்வு செய்து, மறுபடியும் விவசாயிகளை துயரத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.
மேலும், இதுவரை அரசு கையகப்படுத்திய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படியெனில் அப்பகுதி மக்களின் கருத்துக்களைகேட்டு அவா்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இதை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அவா்களுக்கே திருப்பிக் கொடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






