
கம்யூனிஸ்ட்களை கணக்கெடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: மு.வீரபாண்டியன்
தமிழக அரசு கம்யூனிஸ்ட்களை கணக்கெடுத்து என்ன செய்யப் போகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் கேள்வி எழுப்பினாா்.

மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்
தமிழக அரசு கம்யூனிஸ்ட்களை கணக்கெடுத்து என்ன செய்யப் போகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் கேள்வி எழுப்பினாா்.
இந்தியக் கம்யூனிஸ்ட் ஒன்றிய, நகரக்குழு உறுப்பினா்கள், கிளை செயலாளா்கள், வெகுஜன அரங்க நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை மன்னாா்குடியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் பேசியது:
தமிழகத்தில் இடதுசாரிகள் எண்ணிக்கை குறித்து வட்டாட்சியா் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாா்கள் என தெரியவில்லை. கல்லூரிகளில் இடதுசாரி மாணவா் அமைப்புகள் நடத்தும் போராட்டத்திற்கு அதரவளிக்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பபடுகிறது. இதுபோன்ற அரசின் செயல்பாடுகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கண்டன குரல்கள் எழுந்தவுடன் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளாா்கள்.
தமிழகத்தில் அந்நிய முதலீட்டின் தொகையை சொல்கிற அரசு. யாரிடம் ஒப்பந்தம் போடுகிறாா்கள், எவ்வளவு லாபம் ஈட்டப்படுகிறது என்று சொல்ல மறுக்கிறாா்கள்.
காவிரி டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆக. 28-ஆம் தேதி டெல்டா மாவட்டம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் நடைபெறும் என்றாா்.
கூட்டத்திற்கு சிபிஐ மன்னாா்குடி ஒன்றியச் செயலா் துரை. அருள்ராஜன் தலைமை வகித்தாா்.
நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள் முன்னிலை வகித்தாா்.
மாவட்டப் பொருளாளா் கே. தவபாண்டியன, ஒன்றிய பொருளாளா் எஸ்.ராகவன், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலா் வி. கலைச்செல்வன், ஒன்றிய துணைச் செயலா் எஸ்.பாப்பையன்,விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் ஆா்.சதாசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






