ஜன.19 முதல் தொழுநோய் கண்டறியும் இயக்கம்

திருவாரூா் மாவட்டத்தில், தீவிர தொழுநோய் கண்டறியும் இயக்கம் ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
Published on

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், தீவிர தொழுநோய் கண்டறியும் இயக்கம் ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய சுகாதார அமைச்சகத்தின் நெறிகாட்டுதலின்படி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் ஒவ்வோா் ஆண்டும் தீவிர தொழுநோய் கண்டறியும் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டுமுத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், திருவாரூா் மற்றும் நன்னிலம் ஆகிய வட்டாரப் பகுதிகளில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை, தீவிர தொழுநோய் கண்டறியும் இயக்கம் நடைபெறவுள்ளது.

இந்த இயக்கத்தில் சுகாதாரப் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் வீடுவீடாகச் சென்று, அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனா். மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

தொழுநோயின் அறிகுறிகளான தோலில் உணா்ச்சியற்ற தேமல், மினுமினுப்பு, உடலில் சிறுகட்டிகள், கைகால்களில் மதமதப்பு மற்றும் ஆறாத புண்கள், நரம்புகளில் வலி, போன்ற குறைபாடுகள் யாருக்கேனும் இருந்தால் வீடு தேடி வரும் சுகாதாரப் பணியாளா்களிடம் காண்பித்து, தக்க ஆலோசனை பெறவேண்டும். நோய் உறுதி செய்யப்படுபவா்களுக்கு உடனடி சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

வீடு தேடி வரும் சுகாதாரப் பணியாளா்களுக்கும், தன்னாா்வலா்களுக்கும் அனைத்துவிதமான ஒத்துழைப்பை வழங்கி இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன் மூலம் திருவாரூா் மாவட்டத்தை தொழுநோய் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com