அம்மையப்பன் தென்கால் அம்மா நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவாரூா் அருகே அம்மையப்பன் தென்கால் அம்மா நகரில் மின்சாரம், குடிநீா், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. குறிப்பாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகக் கூறி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, அப்பகுதி மக்கள் திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிராமத் தலைவா் மருதையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலா் சீனி செல்வம், மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளா் ஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.








