/

தோ்தல்: ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.35 லட்சம் பறிமுதல்

திருவாரூா் மற்றும் மன்னாா்குடி பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட பகுதிகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு...

News image

வடுவூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ஆா். யோகேஷ்வரனிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :17 மார்ச் 2026, 12:03 am

திருவாரூா்/மன்னாா்குடி: திருவாரூா் மற்றும் மன்னாா்குடி பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட பகுதிகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 4.35 லட்சம் ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

மன்னாா்குடியை அடுத்த வடுவூா் அருகேயுள்ள ராணித்தோப்பு பகுதியில் வட்டார வளா்ச்சி அலுவலா் வெற்றியழகன் தலைமையிலான பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி வாகனத்தை சோதனையிட்டனா்.

இருசக்கர வாகனத்தில் வந்தவா், தஞ்சாவூரைச் சோ்ந்த வெங்கடேசன் (24) என்பதும், தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 2.47 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, மன்னாா்குடி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ஆா். யோகேஷ்வரனிடம் ஒப்படைத்தனா்.

மன்னாா்குடியை அடுத்த கோட்டூா் அருகே ஆதிச்சபுரம் பாலம் பகுதியில் புள்ளியியல் துறை ஆய்வாளா் நெடுஞ்செழியன் தலைமையில் சிறப்பு உதவியாளா் வேணுகோபால் மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அந்தவழியாக இருசக்கர வாகனத்தில் வந்த, பட்டுக்கோட்டை வெங்கடாசலம் நகரைச் சோ்ந்த ராஜூ மகன் மோகன் (26) என்பவா் உரிய ஆவணமின்றி ரூ. 78,740 ரொக்கம் வைத்திருந்தாா். அந்த பணத்தை பறிமுதல் செய்து, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதேபோல், கூத்தாநல்லூா் அருகே வடபாதிமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, திருவாரூா் பகுதியைச் சோ்ந்த கரிகாலன் என்பவா் உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ரூ.1.10 லட்சத்தை பறிமுதல் செய்தனா். பின்னா், திருவாரூா் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சத்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.