நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காந்தியின் தமிழக வருகை நூற்றாண்டு நினைவு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

"தேசப் பிதா' மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு தமிழகத்துக்கு வருகை தந்து நூறு ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், தமிழகத்தில் சிறப்புப் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :16 ஏப்ரல் 2015, 6:53 pm

வே.சுந்தரேஸ்வரன்

"தேசப் பிதா' மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு தமிழகத்துக்கு வருகை தந்து நூறு ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், தமிழகத்தில் சிறப்புப் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தென்னாப்பிரிக்காவில் இனவெறிப் போராட்டத்துக்கு எதிராக வெற்றி பெற்ற காந்தி, இந்தியாவுக்கு 1915-ஆம் ஆண்டு திரும்பினார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றினார்.

தில்லி மாநகருக்கு முதல் முறையாக 1915, ஏப்ரல் 12-இல் வருகை தந்தார். இதன் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக தில்லியில் உள்ள தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் சார்பில் அண்மையில் சிறப்பு விழா நடத்தப்பட்டது. இதேபோன்று, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு காந்தி வருகை தந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏ. அண்ணாமலை, "தினமணி'க்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

மகாத்மா காந்தி அடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து 1915-இல் நாடு திரும்பினார். இதையடுத்து, ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்தார். அதன் பிறகு பல்வேறு காலங்களில் தமிழகத்துக்குப் பலமுறை வருகை தந்தார். அவர் தமிழகத்துக்கு வருகை தந்து நூறாண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொறையார், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் கிராம மக்கள் சார்பில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் (மாயவரம்) மே 1-ஆம் தேதி இளைஞர்கள் அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அன்று மாலை தில்லையாடி கிராமத்தில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் கிராம சபை சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்க போராட்டத்தில் தமிழர்கள்: நூறாண்டுகளுக்கு முன்பு தரங்கம்பாடி, பொறையார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழர்கள் பலர் தென்னாப்பிரிக்காவுக்கு ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் காந்தி மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றனர். இதனால், அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில், காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பியதும், பொறையார், தரங்கம்பாடி, மயிலாடுதுறை (மாயவரம்) தில்லையாடி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றார். அப்போது, தென்னாப்பிரிக்காவில் தன்னுடன் களப் பணியாற்றிய தமிழர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். இதை நினைவுகூரும் விதமாக மேற்கண்ட இடங்களில் இக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஆந்திர மாநிலம், நெல்லூர் டவுன்ஹாலில் மே 5-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்தியவாதிகளான சுப்பிரமணியம், மாருதி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரோசய்யா பங்கேற்க உள்ளார். மேலும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கர்நாடக காந்தி நினைவு நிதி சார்பில் மே 8-ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் சித்தராமையா பங்கேற்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.