மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை: ஜனவரி மாதம் முதல் தில்லியில் தொடக்கம்

மோட்டார் சைக்கிள்களில் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் திட்டத்தை ஜனவரி மாதம் முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் முடிவு செய்துள்ளார்.
Updated on
1 min read

மோட்டார் சைக்கிள்களில் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் திட்டத்தை ஜனவரி மாதம் முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தலைமையில் ராஜ் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், போக்குவரத்துத் துறை சிறப்பு ஆணையர், தில்லி காவல் துறையின் தலைமை செய்தித் தொடர்பாளர், லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, டிடியு மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவ கண்காணிப்பாளர்கள், ஜான் ஆம்புலன்ஸ் பிரகேட்டின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தில்லியின் கிழக்கு, வடகிழக்கு, ஷாதரா ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் திட்டதை ஜனவரி, 2018 முதல் சோதனை முறையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 16 மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ்கள் இதில் ஈடுபடுத்தப்படும்.
நெரிசல் மிகுந்த பகுதிகளில் அவசர சிகிச்சை சேவையை மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் கொண்டு சேர்க்கும். அதன் மூலம் அவசர மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும். உடனடி மருத்துவச் சேவை அளிப்பதில் பயிற்சி பெற்றவர்களே மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸை ஓட்டிச் செல்வார்கள். முதலுதவி மருத்துவ சேவை அளிக்கும் உபகரணங்களையும் அவர்கள் எடுத்துச் செல்வார்கள். ஆம்புலன்ஸ் வானகம் வரும் வரை அவர்கள் அவசர மருத்துவ சேவைகளை அளிப்பார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com