வடக்கு தில்லி, புராரி பகுதியில் சட்ட மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:
மேற்கு சாம்பரான் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிஷ் பரத்வாஜ் (24). குருகிராமில் சட்டக் கல்லூரி ஒன்றில் பயின்று வந்தார். அவரது நண்பர்கள் ஹிமான்ஷு, ஆனந்த். இருவரும் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கின்றனர்.
பரத்வாஜ் உள்ளிட்ட மூன்று நண்பர்களும் ஹர்தேவ் நகரில் வாடகைக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 10-ஆம் தேதி இரவு மூவரும் புராரி பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர் எந்தக் காரணமும் இன்றி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்தச் சமயத்தில் அந்த நபரை மோட்டார்சைக்கிளில் இருந்து மூவரும் தள்ளிவிட்டனர். இதைத் தொடர்ந்து, மோட்டார்சைக்கிளில் வந்த நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் பரத்வாஜை நோக்கி சுட்டார். இதில் கழுத்தில் குண்டுக் காயமடைந்த பரத்வாஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அந்த நபர் தப்பிச் சென்றார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், ரோஹிணியில் உள்ள ஜப்பானிஸ் பார்க்கில் அந்த நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் செளத்ரி (23) என்று அடையாளம் காணப்பட்டது என்றார் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.