ஹரியாணா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த ஷிவாங்கி பாதக் (16) என்ற சிறுமி, சாதனை முயற்சியாக வெள்ளிக்கிழமை எவரெஸ்ட் சிகரம் ஏறுகிறார். அவர் சிகரத்தின் உச்சியை எட்டும் பட்சத்தில், எவரெஸ்ட் சிகரம் ஏறிய இளம் வயது இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.
ஷிவாங்கி உள்ளிட்ட மலையேறும் குழுவினர் தற்போது தரைப்பகுதியில் முகாமிட்டிருப்பதாகவும், சுற்றுலாத் துறையின் அனுமதி கிடைத்த பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் நுழைவாயிலான லுக்லாவுக்கு அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள் என்றும் ஒருங்கிணைப்பாளர் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஷிவாங்கி கூறியதாவது:
எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டும் என சிறு வயது முதலே கனவு கண்டு வருகிறேன். இந்தக் கிரகத்தில் இருக்கும் அனைத்து மலைகளிலும் ஏற வேண்டும் என்பதே எனது ஒரே நோக்கமாகும். முதல் இந்திய மாற்றுத்திறனாளியாக எவரெஸ்ட் சிகரம் தொட்ட அருணிமா சின்ஹா தான் எனக்கான முன்னுதாரணம்.
பெண்கள், எந்தவொரு தடைகளையும் கடந்து தங்களது இலக்கை அடைய இயலும் என்பதை இந்த மலையேற்றத்தின் மூலமாக உலகத்துக்கு தெரிவிக்க விரும்புகிறேன். எனது தந்தை ராஜேஷ், தாயார் ஆரத்தி ஆகியோர் என்னை புரிந்துகொண்டு எனக்கு உரிய ஆதரவு வழங்கி வருகின்றனர் என்று ஷிவாங்கி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








