தில்லி சட்டப்பேரவையில் அலுவல் காகிதத்தை கிழித்த ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஸ்ரா பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அவை தொடங்கியதும், பேரவையின் கேள்வி நேரம் தொடங்கியது. ராமநவமி என்ற பெயரில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகத் தெரிவித்து பேரவையின் அலுவல் பட்டியலில் இடம் பெற்றிருந்த விவாதத்தை நீக்க ஆம் ஆத்மி அதிருப்தி உறுப்பினர் கபில் மிஸ்ரா வலியுறுத்தினார். இதற்கு பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் ஆட்சேம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவையின் மையப் பகுதிக்கு வந்த கபில் மிஸ்ரா, தில்லியில் வகுப்புவாத கலவர சம்பவங்கள் நடைபெறாத போது, அது குறித்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் விவாதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல், "எனது தொகுதியான சாதராவில் இதுபோன்ற வகுப்புவாத கலவரம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை' என்றார்.
பின்னர், கபில் மிஸ்ராவை இருக்கைக்கு செல்லுமாறும், அவையின் அலுவலை தொடர்ந்து நடத்த உதவுமாறும் அறிவுறுத்தினார். அதற்கு செவிசாய்க்காத கபில் மிஸ்ரா அலுவல் காதிதத்தை கிழித்து எறிந்தார். இதைத் தொடர்ந்து அவரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, கபில் மிஸ்ரா அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும், அவருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு: இதே விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையில் பாஜக உறுப்பினர்கள் ஓ.பி. சர்மா, எம்.எஸ். சிர்ஸா, ஜெகதீஷ் பிரதான் உள்ளிட்டோர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே, தில்லி சட்டப்பேரவை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரை மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது இந்தக் கூட்டத்தொடரை மூன்றாவது முறையாக நீட்டிக்க கொண்டுவரப்பட்ட முன்மொழிவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







