சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சீலிங் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்: மத்திய, தில்லி அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

தில்லியில் நடைபெற்றுவரும் சீலிங் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள் என்று மத்திய அரசையும் தில்லி அரசையும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:02 pm

தில்லியில் நடைபெற்றுவரும் சீலிங் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள் என்று மத்திய அரசையும் தில்லி அரசையும் உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது. 
தில்லியில் சட்டவிரோத கட்டுமானங்களை சீலிடுவது, கண்டறிவது ஆகியவை தொடர்பாக ஒரு கண்காணிப்புக் கமிட்டியை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் கே.ஜே. ராவ், சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாடு ஆணையத்தின் தலைவர் புரே லால், மேஜர் ஜெனரல் (ஓய்வு) சாம் சிங்கன் ஆகியோர் இடம்பெற்ற இக்குழு 2006, மார்ச் 24-ஆம் தேதி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உருமாற்றக் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய வணிக வளாகங்களை சீல் வைக்கும் நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் உத்தரவின்படி மூன்று மாநகராட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்டன. உருமாற்றக் கட்டணம் செலுத்தாத வணிக வளாகங்கள் சீல் வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு வணிகர்கள் சங்கங்கள், அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்தநடவடிக்கைக்கு தில்லி அரசும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அங்கீகாரமற்ற கட்டுமானங்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் மற்றும் தில்லி சட்டங்கள் (சிறப்பு ஷரத்துகள்) சட்டம் 2006 ஆகியவற்றின் செல்லுபடித் தன்மை குறித்து உச்ச நீதிமன்ம் விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம், "தலைநகரில் சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுக்க மத்திய அரசு, தில்லி அரசு மற்றும் மாநகராட்சிகள் தோல்வியடைந்துவிட்டன. குடிமக்களின் நுரையீரல் குறிப்பாக குழந்தைகளின் நுரையீரல் அரசுத் துறைகளின் நடவடிக்கையின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் காரணமாக மாசு, வாகன நிறுத்துமிடம், பசுமை இடமின்மை ஆகிய பிரச்னைகளை தில்லி மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்' என தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நட்கர்னி ஆஜராகி, "இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் தொடர்புடைய விவகாரங்களை கண்காணிப்பதற்காக ஒரு சிறப்புப் பணிக் குழுவை அமைக்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முன்மொழிந்துள்ளனர்' என்று தெரிவித்தார். 
அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி. லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, "சில விஷயங்கள் உள்ளன. 
அவற்றை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது அரசியல் விவகாரம் அல்ல. சட்ட விரோதக் கட்டுமானங்கள், சட்டவிரோத கட்டமைப்புகள் ஆகியவை தொடர்பான சீலிங் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்' என்றனர்.
மேலும், தீ பாதுகாப்பு அம்சங்களை குறிப்பாக பள்ளிகளில் இதுபோன்ற விஷயங்களை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். நிலத்தடி நீரும் அதிகளவில் குறைந்து வருகிறது. 
லாபத்தை விட தில்லி மக்களின் சுகாதாரம் மிகவும் முக்கியமானது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த விஷயங்களை முழுமையான அணுகுமுறையுடன் அதிகாரிகள் அணுக வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், மனு மீதான விசாரணையை ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.