வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் வேட்பாளர்களாக புது முகங்களை நிறுத்த தில்லி பாஜக முடிவு செய்துள்ளது. மேலும், கிழக்கு தில்லி மாநகராட்சியில் அதன் தற்போதைய துணை மேயர் பிபின் பிகாரி சிங் மேயர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளார்.
வடக்கு, கிழக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளின் தற்போதைய மேயர்கள் முறையே ப்ரீத்தி அகர்வால், நீமா பகத், கமல்ஜீத் ஷெராவத் ஆகியோரின் ஓராண்டுப் பதவிக் காலம் கடந்த மார்ச் 31- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்க பாஜக தலைமை விரும்பாததால், மாநகராட்சி மேயர்களுக்கான தேர்தல் மீண்டும் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, தெற்கு தில்லி மேயர் தேர்தல் ஏப்ரல் 26, வடக்கு, கிழக்கு தில்லி மேயர் தேர்தல் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சிகளுக்கான புதிய மேயர் வேட்பாளர்களின் விவரங்களை பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி புதன்கிழமை அறிவித்தார்.
இதன்படி, மேற்கு பட்டேல் நகர் கவுன்சிலர் அதேஷ் குமார் குப்தாவை வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் வேட்பாளராகவும், ஜனக்புரி மேற்கு கவுன்சிலர் நரேந்தர் சாவ்லாவை தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் வேட்பாளராகவும் நிறுத்த தில்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இவர்கள் இருவரும் முதல் தடவை கவுன்சிலர்கள் என்பதுடன் இதுவரை இவர்கள் மாநகராட்சியின் எவ்விதப் பதவிகளையும் வகிக்காதவர்கள். அதேநேரம், கிழக்கு தில்லி மேயர் வேட்பாளராக அதன் தற்போதைய துணை மேயர் பிபின் பிகாரி சிங் நிறுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாததால், பாஜக வேட்பாளர்கள் ஏகமனதாகத் தெர்ந்தெடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வடக்கு, தெற்கு, கிழக்கு மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு பாஜக சார்பில் முறையே ராஜேஷ் லவாரியா, சத்யபால் மாலிக், கிரண் வைதா ஆகியோரும் அவைத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் முறையே திலக் ராஜ் கட்டாரியா, கமல்ஜீத் ஷெராவத், நிர்மல் ஜெயின் ஆகியோரும் நிறுத்தப்படவுள்ளனர். நிலைக்குழுத் தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் முறையே வீணா விர்மணி, ஷிக்கா ராய், சத்யபால் சிங் ஆகியோர் நிறுத்தப்படவுள்ளனர்.
நிலைக்குழுத் துணைத் தலைவர் பதவிக்கு முறையே நிஷா மன், பூனம் பட்டி, ரோமேஷ் சந்த் குப்தா ஆகியோர் நிறுத்தப்படவுள்ளனர். இவர்களை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாததால் இவர்களும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர்.
இந்நிலையில், தில்லி மாநகராட்சிகளில் நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதால் நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
வடக்கு, தெற்கு, கிழக்கு மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், அவைத்தலைவர், நிலைக்குழுத் தலைவர், துணைத் தலைவர், நிலைக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான வேட்பாளர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடினமாக சளைக்காமல் மக்கள் பணியாற்றக் கூடிய வகையில் புது முகங்களை இந்த முறை தேர்ந்தெடுத்துள்ளோம். வேட்பாளர் தேர்வில்அனைத்து சமுதாய மக்களுக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நேர்மையாக,வெளிப்படையாக மக்கள் பணியாற்றுவார்களென நம்புகிறேன் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய உள்கட்டமைப்பு திட்டங்கள்: அரசுக்கு ரூ. 5.65 லட்சம் கோடி கூடுதல் செலவினம்!
அதிகாரிகளின் உள்நாட்டுப் பயணச் செலவுகளில் 25 % குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்






