சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை ஜூலை 4-க்கு ஒத்திவைப்பு

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையை தில்லி உயர்நீதிமன்றம் ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Updated On :21 மே 2018, 6:16 pm

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையை தில்லி உயர்நீதிமன்றம் ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா செஹகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி முன்வைத்த வாதம்:
1972-ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து தற்போதுவரை அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதில்லை. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பொதுச் செயலாளர்களாகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். இதுபோன்ற சூழலில், அதிமுக பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க கட்சியின் அடிப்படை உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்த வேண்டும் என்ற வாதம் எதிர்த்தரப்பிரனால் முன்வைக்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அவர் தமிழகத்தின் முதல்வராக விரும்பியதுதான் பிரச்னையின் தொடக்கமாகும். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சியில் சேர்க்கப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கட்சியில் டிடிவி தினகரனை சேர்த்து, அவரை துணைப் பொதுச் செயலாளராக்கினார் சசிகலா. ஃபெரா வழக்கு விசாரணையின்போது டி.டி.வி. தினகரன் தாம் இந்திய பிரஜை இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இத்துடன், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க முயன்றாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 25 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை சிறையில் இருந்தார்' என்றார் சி.எஸ். வைத்தியநாதன்.
இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
பின்னணி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. அந்த உத்தரவை செல்லாததென அறிவிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.