கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

குப்பைக் கிடங்குகளில் தீ: தடுக்க மாநகராட்சிகளுக்கு அமைச்சர் உத்தரவு

தில்லியில் குப்பைக் கிடங்குகளில் தீ எரியும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு

Updated On :22 அக்டோபர் 2018, 8:12 pm

தில்லியில் குப்பைக் கிடங்குகளில் தீ எரியும் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மூன்று மாநகராட்சிகளுக்கும் தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இம்ரான் ஹுசேன் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர் இம்ரான் ஹுசேன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தில்லியின் சுற்றுச்சூழல், தீயணைப்புத் துறை, தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். தில்லியில் உள்ள பல்ஸ்வா, காஜிப்பூர், ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளில் ஏற்படும் தீ எரியும் சம்பவங்களைக் கையாளும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. 
இதுகுறித்து தில்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இக்கூட்டத்தில் தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் ஆணையர்கள் கலந்து கொள்ளவில்லை. பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் தீ எரிந்து வருவது குறித்து கவலை தெரிவித்த அமைச்சர் இம்ரான் ஹுசேன், "தில்லியில் ஏற்கெனவே அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளால் காற்றின் தரத்தில் மாசு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்று குப்பைக் கிடங்குகளிலும் தீ எரிந்தால் அது மேலும் மோசமான விளைவுகளுக்கு வித்திடும். ஆகவே, இதுபோன்று குப்பைக் கிடங்குகளில் தீ எரியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான காரணிகளைக் கண்டறியும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட துறைகள் ஈடுபட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க வடக்கு தில்லி மாநகராட்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, தீயை உடனடியாக அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்குத் தில்லி மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், காஜிப்பூர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு பகுதியில் குப்பை பொறுக்குவோர் அனுமதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். இதற்காக போதிய ஊழியர்கள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினர். மேலும், குப்பைக் கிடங்குகள் சிசிடிவி மூலம் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, ஓக்லா, பல்ஸ்வா பகுதி குப்பைக் கிடங்குகளில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகள் தங்கள் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்குகளில் குழந்தைகள் உள்பட குப்பை பொறுக்குவோர் உள்ளே நுழையாத வகையில் தடுப்பு வேலிகளை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், குப்பைக் கிடங்கு பகுதிகளில் போதிய ஊழியர்களை பணியில் அமர்த்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இதுதவிர, குப்பைக் கிடங்குளில் தீ எரியும் போது அதை அணைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை பதிவு செய்து பராமரிக்குமாறு மூன்று மாநகராட்சிகளுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.