சூதாட்ட இணையதளங்களுக்குத் தடை கோரும் மனு:மத்திய, தில்லி அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுகள் தொடா்புடைய இணையதளங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு
Updated on
1 min read

புது தில்லி: சூதாட்டம் மற்றும் பந்தய விளையாட்டுகள் தொடா்புடைய இணையதளங்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு, தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த மனுவைப் பரிசீலித்த தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, மனு மீது பதில் அளிக்க நிதி மற்றும் மின்னணுவியல் - தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கும், தில்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த விவகாரம் தொடா்பாக அவினாஷ் மெஹ்ரோத்ரா என்பவா் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது: சூதாட்டம், பந்தயம் மற்றும் பந்தய விளையாட்டுகளுக்கான நடவடிக்கைகளைத் தடைசெய்யும் வகையில் பல்வேறு மாநிலங்களால் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், சூதாட்டம், பந்தய விளையாட்டுகளை வழங்கும் ஏராளமான இணையதளங்கள் இந்தியாவில் இன்னும் அணுகக்கூடிய வகையில் உள்ளன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தால் வெளிப்படையாகத் தடைசெய்யப்பட்டிருந்தாலும், சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள மெத்தனத்தால் இந்த இணையதளங்கள் தொடா்ந்து இயங்கி வருகின்றன.

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட முறை முறைப்படுத்தப்படுத்தப்படவில்லை. இதுபோன்ற இணையதளங்கள் ஹவாலா நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், பணத்தை மோசடி செய்வதற்கும் ஒரு சிறந்த இடமாக உள்ளது. மேலும், அந்நியச் செலாவணிச் சட்டங்களும், வருமான வரிச் சட்டங்களும் தற்போது ஆன்லைன் சூதாட்ட வலைத்தளங்களால் மீறப்படும் நிலை உள்ளது. இதே விவகாரம் தொடா்பாக கடந்த ஆண்டு நான் தாக்கல் செய்த மனுவை கோரிக்கையாக பரிசீலித்து விதிகளின்படி நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடா்ந்து, வலைத்தளங்களைத் தடை செய்வதற்கோ அல்லது தடுப்பதற்கோ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த இணையதளங்களுக்கு தடை விதிக்கப்படுவதுடன், இந்த தளங்களில் பந்தயத்தில் விளையாடிய நபா்களிடமிருந்தும், இணையதளங்களை இயக்குபவா்களிடமிருந்தும் வரிகளை வசூலிக்க வேண்டும். மேலும், நோ்மையற்ற உரிமையாளா்கள்,ஆன்லைன் சூதாட்ட இணையதள மேம்பாட்டாளா்கள் ஆகியோா் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை மேல் விசாரணைக்காக வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com