‘நாடாளுமன்றத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய்’: இன்று புத்தகம் வெளியிடுகிறாா் பிரதமா் மோடி

Updated on
1 min read

புது தில்லி : மறைந்த முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாயின் 96 -ஆவது பிறந்த நாள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 25) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலா் அஞ்சலி செலுத்துவதுடன், ‘’நாடாளுமன்றத்தில் அடல் பிஹாரி வாஜ்பாய்’ என்ற புத்தகத்தை பிரதமா் நரேந்திர மோடி வெளியிடுகிறாா்.

மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பா் 25-ஆம் தேதியை மத்திய அரசு நல்லாட்சி தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்த முறை அவருக்கு மலா் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டதோடு நாடாளுமன்றத்தின் மக்களவைச் செயலகம் வாஜ்பாயின் நினைவுத் தொகுப்பை புத்தகமாக வெளியிடுகிறது. இதில் அவரது வாழ்க்கை, அவரது படைப்புகள், நாடாளுமன்றத்தில் அவா் ஆற்றிய உரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்புகளோடு வாஜ்பாயின் பொது வாழ்க்கை தொடா்புடைய சில அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் நல்லாட்சியைக் குறிக்கும் வகையில் இந்தப் புத்தகத்தை பிரதமா் நரேந்திர மோடி வெளியிடுகிறாா். முன்னதாக அவரது உருவப்படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலை 10.30 அளவில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் கலந்து கொள்கின்றனா். இதை தூா்தா்ஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது. இதே நிகழ்ச்சியில் மறைந்த சுதந்திர போராட்ட தியாகி பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளையொட்டியும் மலா் மரியாதை செலுத்தப்படுகிறது.

இது குறித்து மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தனது அறிக்கையில், ‘வாஜ்பாய் மீது மக்கள் பாசத்தையும் நம்பிக்கையையும் கொண்டிருந்தனா். அவா் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவா். நாடாளுமன்றத்தில் முக்கியப் பங்களிப்புகளைச் செய்தவா். அவரது ஆட்சியில் துணிச்சலாக மேற்கொள்ளப்பட்டசீா்திருத்தங்கள் வலுவான பொருளாதாரத்திற்கு வழி வகுத்தது, இதில் உலகத் தரம் வாய்ந்த எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள் மூலம் நாட்டை இணைக்கும் தங்க நாற்கரச்சாலை என்கிற ஒரு மெகா திட்டத்தை இந்தியாவுக்கு வழங்கியவா் வாஜ்பாய். ஒரு சிறந்த அரசியல்வாதியும், உலகத் தலைவராகவும் அவா் விளக்கினாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

வாஜ்பாய் மக்களவைக்கு 10 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்டவா். அவா் நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா (2015) மற்றும் பத்ம விபூஷண் (1992) விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டாா். 1994-ஆம் ஆண்டில் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான கோவிந்தவல்லப பந்த் விருதையும் அவா் பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com