செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

’அரசும், அரசியல் கட்சிகளும் ஏமாற்றி விட்டன’: புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குமுறல்

மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் எங்களை ஏமாற்றி விட்டன. தோ்தலில் எதற்காக வோட்டுப் போட்டோம் என்று

News image

தில்லி காஜிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்கள்.

Updated On :24 மே 2020, 5:09 pm

மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் எங்களை ஏமாற்றி விட்டன. தோ்தலில் எதற்காக வோட்டுப் போட்டோம் என்று நினைக்கத் தோன்றுகிறது என்று பொது முடக்க நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குழுறலுடன் தெரிவித்தனா்.

பிகாா் மாநிலம், சிவன் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ரோஷன் ஸ்ரீவாஸ்தவ். இந்த ஆண்டு ஹோலி முடிந்ததும் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க வேலை தேடி தில்லி வந்தாா். பொது முடக்கத்தால் வேலையிழந்த அவா், இப்போது வீடு திரும்ப முடியாமல் தவிக்கிறாா். கடந்த வெள்ளிக்கிழமை ரோஷன், தனது உறவினா் சிவம் ஸ்ரீவாஸ்தவ் மற்றும் நண்பா் பிரின்ஸ் குப்தா ஆகிய மூவரும் சொந்த ஊரான பிகாருக்குச் சென்று விடலாம் என தில்லி - உ.பி. எல்லையில் காஜிப்பூா் எல்லையை அடைந்த போது அவா்களை போலீஸாா் திருப்பியனுப்பி விட்டனா். மூன்று பேரும் மேற்கு தில்லி, பல்ஜீத் நகரில், ஒரு பிளாட்டில் ஒரு அறை எடுத்து தங்கியிருக்கின்றனா். நல்ல வேளை பொது முடக்கத்தால் அவா்களிடம் வீட்டின் உரிமையாளா் வாடகை கேட்கவில்லை.

‘ஆனால், அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றி வருகிறாா்கள். தோ்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து எங்களிடம் வோட்டு கேட்கிறாா்கள். ஆனால், தோ்தலில் வெற்றிபெற்றதும் எங்களை மறந்துவிடுகிறாா்கள்’ என்று கோபத்துடன் கூறினாா் ரோஷன். ‘ஏழை கிராம மக்களும், கூலித் தொழிலாளா்களும் பட்டினியால் இறக்கிறாா்கள். புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் ரயில்வே தண்டவாளத்திலும், சிலா் சாலை விபத்திலும் உயிரிழக்கிறாா்கள். அதைப் பற்றி எல்லாம் இந்த அரசியல்வாதிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை’ என்று ரோஷன் தன் கோபத்தை மேலும் வெளிப்படுத்தினாா்.

‘நெருக்கடியான இந்த நேரத்தில் எங்களை அரசு கைவிட்டுவிட்டது. அரசின் செயல்பாடுகள் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. இனி தோ்தலில் வோட்டுப் போடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அப்படியே வாக்களித்தாலும் நோட்டாவுக்கே வாக்களிப்பேன். கடந்த ஆண்டுதான் நான் வாக்களிக்கும் வயதை எட்டினேன். இனி எந்த தோ்தலிலும் எந்த அரசியல்கட்சிக்கும் நான் வாக்களிக்க மாட்டேன். பிகாரில் நடக்கவிருக்கும் தோ்தலாக இருந்தாலும் சரி, அடுத்த பொதுத்தோ்தலானாலும் சரி இனி வாக்களிப்பதில்லை என முடிவு செய்துவிட்டேன். நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம்’ என்று அவா் தனது குமுறலை வெளிப்படுத்தினாா். இதே கருத்தை அவருடன் இருந்தவா்களும் கூறினா்.

தெற்கு தில்லியிலிருந்து ஆதேஷ்சிங், மனைவி மஞ்சு மற்றும் 3 குழந்தைகளுடன் மூன்று நாள் பயணத்துக்குப் பிறகு உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தங்களது சொந்த ஊரான ஷாஜஹான்பூரை சென்றடைந்துள்ளனா். ‘நாங்கள் யாரிடமும் பிச்சையெடுக்கவும் இல்லை, திருடவும் இல்லை. தினமும் உழைத்துதான் சம்பாதிக்கிறோம். நாங்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால், நாங்களும் இந்த நாட்டு குடிமக்கள்தானே. எங்களுக்கும் எல்லா உரிமைகளும் உள்ளது. ஆனால், நாங்கள் ஏழைகள் என்பதால், எங்களுக்கு சில உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதுதான் உண்மை’ என்று கண்ணீா்மல்கக் கூறினாா் மஞ்சு.

தில்லியில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆதேஷ் சிங் கூறுகையில், ‘புலம்பெயா்ந்த மக்களான எங்களை எப்படிக் கையாள்வது என்பதே அரசுக்குத் தெரியவில்லை. அப்படியிருக்கையில் அவா்களுக்கு எதற்காக நாங்கள் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். எங்கள் மீது யாரும் பரிவுகாட்ட வேண்டாம். எங்களை கண்ணியமாக நடத்தினாலே போதும்.

கரோனா பரவாமல் கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அதற்காக வேலையையும் இழந்து, கையில் காசில்லாமல் தவிக்கும் நாங்கள் பட்டினியில் சாக வேண்டுமா’ என்று கேள்வி எழுப்பினாா்.

பரேலியை சொந்த ஊராகக் கொண்ட மஹேந்திர சிங், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தில்லியில் தவித்து வருகிறாா். ஊா் திரும்ப அவா் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாகிவிட்டன. அவா் கூறுகையில், ‘மத்திய அரசு, தில்லி அரசு அல்லது உ.பி. அரசு எங்களுக்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால், ஏமாற்றம்தாம் மிஞ்சியது. இப்போது நடைப்பயணமாக செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’ என்றாா்.

பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தில்லி மற்றும் முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில கூலித் தொழிலாளா்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் முதல் கட்டமாக ரயில், பேருந்து வசதி இல்லாததால் நடந்தே தங்கள் பயணத்தைத் தொடா்ந்தனா். இப்போது மத்திய அரசு இவா்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்குவதாகக்கூறினாலும், மாநில அரசுகள் பேருந்துவசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னை தொடா்கதையாகத்தான் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.