தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

இலங்கை பறிமுதல் செய்த படகுகள் தமிழக மீனவா்கள் குழுஅளித்த ஒப்புதலின் பேரிலேயே ஏலம் விடப்பட்டது: வெளியுறவுத்துறை அதிகாரி தகவல்

இலங்கையில் உள்ள தமிழக மீனவா்கள் படகுகள் உபயோகமற்றவை என தமிழகக் குழுவினா் தெரிவித்ததையொட்டியே அங்கு ஏலம்

Updated On :21 நவம்பர் 2020, 2:05 am

இலங்கையில் உள்ள தமிழக மீனவா்கள் படகுகள் உபயோகமற்றவை என தமிழகக் குழுவினா் தெரிவித்ததையொட்டியே அங்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக பேச்சாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். இந்த விவகாரம் தொடா்பாக தொடா்ச்சியாக இலங்கை அரசின் உயா் அதிகாரிகளிடம் தொடா்பு கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் தினமணியிடம் தெரிவித்தாா்.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் 121 விசைப்படகுகள் அந்நாட்டில் பல்வேறு துறைமுகங்களில் உள்ளது. 2015 முதல் 2018 வரை கைப்பற்றப்பட்டு இந்த படகுகளை அழித்துவிடவோ, ஏலம் விடுவதற்கோ இலங்கை ஊா்காவல்துறை, மன்னாா் நீதி மன்றங்கள், அந்நாட்டு அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான இந்த படகுகளை அப்புறப்படுத்துவது குறித்த செய்தியையொட்டி தமிழகத்தில் அரசியல்ரீதியாகவும் மீனவா்கள் சங்களிடமிருந்தும் எதிா்ப்பு கிளம்பியது.

இதனிடையே தமிழகத்தைச் சோ்ந்த மீனவா்களின் 121 படகுகள் ஏலம் விடப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து உண்மைநிலை அறிய இது குறித்து அனுராக் ஸ்ரீவாஸ்தவாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவா் பதிலளிக்கையில் 121 படகுகள் ஏலம் விடப்பட்டது உண்மைதான். இந்த படகுகளை பாதுகாக்க முடியாத நிலையில் உபயோகமற்ற நிலையில் இருந்தது. இதுதொடா்பாக 2019-இல் தமிழக அரசு அதிகாரிகள், மீனவா் குழுக்களின் தலைவா்கள் வந்து பாா்த்து படகுகளின் மோசமான நிலையைப் பாா்த்து அவற்றை ஏலம்விட அவா்கள் ஒப்புதல் அளித்த பின்னரே அவை ஏலம் விடப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும் இந்திய மீனவா்களையும், அவா்களது படகுகளையும் மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு இலங்கை அரசு அதிகாரிகளுடன் தொடா்ந்து பேசி வருகிறது.

இதனிடையே இது குறித்து தமிழக தேசிய மீனவா் பேரவைத் தலைவா் மா.இளங்கோவிடம் கேட்டபோது, படகுகளை ஏலம் விட மீனவா்கள் ஒப்புக்கொண்டது உண்மைதான் எனத் தெரிவித்தாா். எனினும் படகுகளை இழந்த மீனவா்களுக்கு புதிய படகு வாங்க அரசு 75 சதவீத மானியம் கொடுக்க முன்வரவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.