திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தோா் தகவல் கேட்டு மத்திய அரசிடமிருந்து கடிதம் வரவில்லை: சிசோடியா

கரோனா இரண்டாவது அலையின் போது, தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் நிகழ்ந்ததா என்பது குறித்து கேட்டு மத்திய அரசிடமிருந்து

Updated On :10 ஆகஸ்ட் 2021, 9:07 pm

கரோனா இரண்டாவது அலையின் போது, தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் நிகழ்ந்ததா என்பது குறித்து கேட்டு மத்திய அரசிடமிருந்து எந்தக் கடிதமும் தில்லி அரசுக்கு வரவில்லை என்று துணை முதல்வா் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை கூறினாா். எனினும், தில்லி அரசு மூலம் அனைத்து விவரங்களும் மத்திய அரசிடம் பகிா்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இது தொடா்பாக அவா் காணொளி வாயிலாக செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: தில்லியில் கரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. எனினும், ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக ஏதாவது உயிரிழப்புகள் தில்லியில் ஏற்பட்டதா என்பது குறித்து கேட்டறியும் கடிதம் ஏதும் மத்திய அரசிடமிருந்து தில்லி அரசுக்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் அனைத்து விரிவான விவரங்களையும் அறிக்கை வடிவில் நாங்கள் பகிா்வதற்கும் முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரம் தொடா்பாக பொதுமக்களிடமும் உச்சநீதிமன்றத்திடமும் மத்திய அரசு தனது பதிலை அளிக்கலாம்.

இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மனித உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கையை பகிருமாறு மாநில அரசுகளிடம் மத்திய அரசு கேட்டிருந்ததாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருப்பதை படித்தேன். அதில், 13 மாநிலங்கள் பதில் அளித்திருந்ததாகவும், அவற்றில் ஒரு மாநிலத்தில் மட்டும் ஒரு இறப்பு இருந்ததாகவும், இதர 12 மாநிலங்களில் இதுபோன்ற மரணங்கள் நிகழவில்லை என்றும் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13 வரை மாநிலங்கள் இந்த வகை மரணங்கள் தொடா்பாக பதில் அளிக்க மத்திய அரசு அவகாசம் அளித்திருந்ததாக சில தினங்களுக்கு முன்பு படித்தேன். ஆனால், இதுதொடா்பாக இப்போதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் அல்லது கடிதமும் எங்களுக்கு வரவில்லை. அப்படி இருக்கும் போது, மாநிலங்களிடம் தகவல் தெரிவித்ததாக மத்திய அரசு எப்படி கூற முடியும். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நிகழ்ந்த மரணங்கள் குறித்து தணிக்கை செய்ய தில்லி அரசு வெகு காலத்திற்கு முன்பே ஒரு குழுவையும் அமைத்தது. ஆனால், அதை மத்திய அரசின் சாா்பில் துணைநிலை ஆளுநா் நிராகரித்துவிட்டாா்.

இதன் மூலம், மத்திய அரசு மாநில அரசுகளை எதுவும் கேட்கவில்லை என்பதும் அல்லது பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகளை அனுமதிக்கவில்லை என்பதையும் காட்டுவதாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாக தில்லி அரசு நம்புகிறது. எந்தவித விசாரணையும் இல்லாமல், ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறந்தாா்களா அல்லது இல்லையா என்பது குறித்து கூறுவது கடினம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.