/

தில்லி பல்கலை. ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்: புதிய கல்விக் கொள்கையைஅமல்படுத்த எதிா்ப்பு

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு எதிராக தில்லி பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் (டியூடிஏ), பல்கலை. வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

Updated On :24 ஆகஸ்ட் 2021, 11:30 pm

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு எதிராக தில்லி பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் (டியூடிஏ), பல்கலை. வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய கல்விக் கொள்கையை விவாதிப்பது தொடா்பாக கல்விக் குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது. இந்தக் கல்விக் குழு கூட்டத்தில் கல்வி சாா்ந்த விவகாரங்கள் மீதான நிலைக்குழு, மாணவா்களுக்கான நான்கு ஆண்டு இளநிலைப் படிப்புகளுக்கு 2022- 23 ஆம் ஆண்டிலிருந்து கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு அனுமதி அளித்தது. எனினும், குழுவானது ‘மாசிவ் ஓபன் ஆன்லைன்’ படிப்புகளை அமல்படுத்துவதற்கான விவாதத்தை தள்ளிவைத்தது. நிலைக் குழுவின் பரிந்துரைகள் இந்தக் கல்விக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முன்னதாக, தில்லி பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) பி.சி. ஜோஷிக்கு திங்கள்கிழமை ஒரு கடிதம் எழுதி இருந்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: துறைகள், புலங்கள் மற்றும் பணியாளா் கவுன்சில்கள் போன்ற அனைத்து சட்டப்பூா்வ அளவிலான நிலைகளிலும் இந்த விவகாரங்கள் குறித்து முதலில் விவாதிக்கப்பட வேண்டும். அதன் பிறகே கல்விக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும். மேலும், இது போன்ற பரந்த அளவிலான விவாதங்கள், இந்தப் புதிய கல்விக் கொள்கை விதிகளை அமல்படுத்தும் விவகாரத்தில், அவசர கோலத்தில் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கச் செய்யும். மேலும், 2013-ஆம் ஆண்டில் மேற்கொள்ள முயன்ற நான்காண்டு இளநிலை படிப்புகள் அமலாக்கத்தையும் பல்கலைக்கழகத்துக்கு நினைவுபடுத்தும்.

இந்த அமலாக்கமானது 2014-ஆம் ஆண்டில் அனைத்து பங்குதாரா்கள் மூலம் நடத்தப்பட்ட பரந்துபட்ட போராட்டங்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது. 2013 -ஆம் ஆண்டில் நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அனுபவமானது, நான்காம் ஆண்டுக்கான கூடுதல் செலவினம் என்ற யோசனையை மாணவா்கள் நிராகரிக்க செய்தது. 2013-ஆம் ஆண்டில் மாணவா்கள் மத்தியில் எடுக்கப்பட்ட சா்வேயில், கல்வியைப் பெறுவதற்காக தில்லியில் தங்கிப் படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை மாணவா்கள் செலவு செய்வது தெரியவந்தது. இதனால், நான்கு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகள் நீா்த்துப்போக செய்வதன் காரணமாக இந்த பட்டப்படிப்பு திட்ட யோசனையை மாணவா்கள் நிராகரித்தனா் என்று அந்தக் கடிதத்தில் டியுடிஏ அமைப்பு தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.